எங்கே இருக்கிறாய் இன்னும்..
ஏளனமெய்ய அருகே இருகோள் அழைத்து என்னைக்
கேலிசெய்யும் வானில் வெண்ணிலவின் பிறை!
வீதியெல்லாம் ஒளிகள் பால்வெளியில் வந்து எனக்கு
சேதிசொல்லும் நானோ நீயில்லாததன் குறை; என்
விண்ணை விரிக்க வரும் விண்மீனே,
எங்கே இருக்கிறாய் இன்னும்..
மின்னிக்கொண்டு?
நீயின்றி நானும் தனியாய் போவதைக் கண்டு
நின்றுவிடும் பட்டப்பகல் போலஎன் நிழல்!
தூதுவிடத் தென்றல் காற்றும் காதல் கொண்டு
ஊதிவரும் மூங்கில் காட்டில் குழல்; என்
நிலத்தில் நடக்க வரும் நந்தவனமே,
எங்கே இருக்கிறாய் இன்னும்..
மலர்ந்துக்கொண்டு?
பாவை உன்கால் போகும் வழிஆகப் பார்த்துப்
பளிங்காகும் கடைத் தெருவின் கட்டாந்தரை!
பட்டவள் உன்மேனி படும் தீண்டலை வேண்டிப்
பூஞ்சையாகும் புல்லட் வண்டியின் பின்னிடம்; என்
ஊரில் உலவ வரும் ஊதாப்பூவே,
எங்கே இருக்கிறாய் இன்னும்..
சிரித்துக்கொண்டு?
பூக்கூந்தல் வாசம் வீசும் நாள்வரும் வரை
பூக்கா நோன்பிருக்கும் தோட்டத்துச் செடி!
முரடனது மரக்கால் மட்டும் இறங்கிஏறத் தரை
கரடாக்கித் தடுக்கிவிடும் மாடத்துப் படி; என்
வீட்டை வரைய வரும் வானவில்லே,
ஏன் இருக்கிறாய் இன்னும்..
ஒளிந்துக்கொண்டு?
மணல்மீது மீண்டும் வந்து மோதும் கடலலையும்
கணக்கின்றிக் கூறுமென் ஏக்கம் தன்னை;
சணல் காட்டைத் தாண்டிவரும் ஒற்றை மரமும்
உணர்த்திச் செல்லும் தனிக்கட்டை என்னை; என்
தனிமையைத் தகர்க்க வரும் தேவதையே,
எப்படி இருக்கிறாய் இன்னும்..
தூங்கிக்கொண்டு?
பண்பாடி பறந்து செல்லும் மனமும் நான்உனைக்
கண்மூடி கனவில் கண்ட கணம்;
உறங்கும் நேரம் எல்லாம் வரும் பட்டாம்பூச்சிஉன்
நிறங்கள் நிற்கும் நினைவில் நிதம்; என்
கனவைக் கடத்த வரும் காதலியே,
எதற்கு இருக்கிறாய் இன்னும்..
காத்துக்கொண்டு?
December 5, 2008 - 12:55 PM








