கள்ளிப்பால் காவியம்
சிதறிக் கொண்டிருந்தது செடியிலிருந்து பால்,
அழத் தொடங்கினாள் குழந்தை பிறப்பில்..
கதறிக் கொண்டு அழுதாள் தன் தவிப்பால்,
விழத் தொடங்கினாள் பாழுங்கிணற்றில்..
தன்னைப் படைத்தவனுக்காக அழுதாள்,
அணைத்திருக்கும் தன் அன்னைக்காக..
தன்னைப் பெண்ணாக்கியவனுக்காக அழுதாள்,
துணைப் போனத் தன் தந்தைக்காக..
பெண்ணின் போற்றாப் பெருமைக்காக அழுதாள்,
ஆணைமட்டும் பிரித்துப் போற்றுவோருக்காக..
பெண்ணின் பெருமையறியா இவ்வுலகுக்காக அழுதாள்,
ஆணாதிக்கம் அடையப் போகும் அழிவுக்காக..
தொட்டில் குழந்தைத் திட்டத்துக்காக அழுதாள்,
அதில்கூட தன்னைப் போடவிழையா பெற்றோருக்காக..
கட்டிலில் கண்ணுறங்குபவளின் கையாலாகாமல் அழுதாள்,
எதில் போட்டாலும் திருந்தா தன் உறவினருக்காக..
தன்னைக் கொள்ளப் போகும் கள்ளிக்காக அழுதாள்,
கள்ளியிலிருந்து பால் கொண்டுவரும் கிழவிக்காக..
பெண்சிசுவைக் கொல்லா ஓர் உலகுக்காக அழுதாள்,
தள்ளி வரப்போகும் அத்திருநாளுக்காக,
அழுதாள், அழுதாள்; வீறிட்டு அழுதாள்;
அழுகை நின்றது.
இன்றைக்கு செத்தால், நாளைக்கு பாலோ?
இன்றைக்கு பாலில் இன்றே செத்தாள்!
November 6, 2008 - 3:21 PM


