தூரல்

பெய்யெனப் பெய்யும் தமிழ்

எங்கே இருக்கிறாய் இன்னும்..

வெண்ணிலவின் கேலிப்புன்னகை

ஏளனமெய்ய அருகே இருகோள் அழைத்து என்னைக்

கேலிசெய்யும் வானில் வெண்ணிலவின் பிறை!

வீதியெல்லாம் ஒளிகள் பால்வெளியில் வந்து எனக்கு

சேதிசொல்லும் நானோ நீயில்லாததன் குறை; என்

விண்ணை விரிக்க வரும் விண்மீனே,

எங்கே இருக்கிறாய் இன்னும்..

மின்னிக்கொண்டு?

மூங்கில் குழல் தூது

நீயின்றி நானும் தனியாய் போவதைக் கண்டு

நின்றுவிடும் பட்டப்பகல் போலஎன் நிழல்!

தூதுவிடத் தென்றல் காற்றும் காதல் கொண்டு

ஊதிவரும் மூங்கில் காட்டில் குழல்; என்

நிலத்தில் நடக்க வரும் நந்தவனமே,

எங்கே இருக்கிறாய் இன்னும்..

மலர்ந்துக்கொண்டு?

மேலும் படிக்க..”எங்கே இருக்கிறாய் இன்னும்..”

குறிச்சொற்கள்: , ,
December 5, 2008 - 12:55 PM சாரல்கள் (13)

ஈழக்கதவுகள் - சூரியதீபன்

ஈழக் கதவுகள்
- பா. செயப்பிரகாசம் (சூரியதீபன்)
தோழமை வெளியீடு, ரூ.100, முதல் பதிப்பு - சனவரி 2007, 160 பக்கம்

ஈழக் கதவுகள்

ஈழக் கதவுகள் - முன்னட்டை

ஈழக் கதவுகள்

ஈழக் கதவுகள் - பின்னட்டை

2002-ல் ‘மானுடத்தின் தமிழ்க்கூடல்’ மாநாட்டுக்கு யாழ் போயிட்டு வந்த எழுத்தாளர் சூரியதீபன், தன் பயண நிகழ்வுகளை, கவிதைகளும் மேற்கோளும் கதைகளும் நிகழ்ச்சிகளும் கலந்த கட்டுரைகளாக் கொடுத்திருக்காரு. மாநாடு நடக்கறப்ப அங்க சுத்தி இருக்கற தமிழர் இடங்களை பாத்து, வெவ்வேறு நினைவிடங்களைப் பத்தியும் மக்களின் நினைவுகளைப் பத்தியும் உணர்வுசொட்ட எழுதியிருக்காரு.

குறிப்பா, அங்க இலங்கைப்படையின்கீழ் இருக்கற பகுதிகள்-ல உள்ள கட்டுப்பாடுகளைப் பத்தியும், ஈழப்போரின் விளைவால அங்க உள்ளவைகளை - இல்லாமல் போனவைகளைப் பத்தியும், நூல் கடைசியில, தொண்ணூறுகளோடப் பிற்பகுதியில கூட்டங்கூட்டமாக் காணாமப் போனத் தமிழர்களப் பத்தியும் அவரு சொல்றதப் படிக்கும்போது நம்மையும் அறியாம கண்ணுல ஆறு ஓடத் தொடங்கிடுது. தேவையான இடங்கள்-ல கூட இருக்கறப் புகைப்படங்கள் மனசை அழுத்துது.

படிக்கும் நம்மையே வேதனைகொள்ளச் செய்யற இந்த நிகழ்வுகளும் இடங்களும் நேர்ல பாத்த எழுத்தாளரை என்ன பாடு படுத்தியிருக்கும்? அதைவிட, அந்த நிகழ்வுகள்-லயும் இடங்கள்-லயும் வாழ்ந்தும் வாழ்ந்துக் கொண்டும் இருக்கற தமிழர்கள் நிலை என்ன?! 2002-ல போர்நிறுத்தம் இருந்தப்பவே இவ்வளவு கெடுபிடிங்கறத நினைவுல வச்சிப் பாத்தா, இப்போ போர்க்காலத்துல என்னலாம் நடக்கும்னு கற்பனைக்கூட செஞ்சுப் பாக்க முடியல..

முன்னோட்டம்:

என்ன? பயணக்கட்டுரைகள். (தொடர்ச்சியுடன்)
எங்க வாங்கினேன்? ஊருல நூல்கண்காட்சி, வலையத்தில் வாங்க..
யாரு படிக்கலாம்? ஈழத்தமிழர்/ஈழத்தின் நிலை பத்தி அறிய விரும்பறவங்க.

நூலோட்டம்:

இந்த வேதனை நாங்கள் அறியாதது. தமிழ்ச்சமூகம் அறியாதது.

.. .. ..ஈழத்தமிழர்களின் வாழ்வு ஒரு கண்ணீர்க் கல்லறையாகி விட்டது. உலக வரைபடத்தில் அது பெரிய கண்ணீர்த்துளி.

எல்லாக் கட்டிடங்களும், மக்கள் விட்டுச் சென்ற எல்லா வீடுகளும் ராணுவ முகாமாகியிருந்தன. சிக்காமல் மீதியிருந்த வீடுகள் மூச்சடைத்து திணறின.

“இறந்து போனவர்களையே நிம்மதியாகத் தூங்க விடவில்லை. இவர்கள் உயிருள்ளவர்களை எப்படி வாழவிடுவார்கள்?” - பிரபாகரன் சொன்னார்.

பின்னோட்டம்:

வாங்க வைத்தது : ஈழத்தமிழர் மீதுள்ள ஆர்வமும் அன்பும்
தாங்க வைத்தது : மேற்கோள்களுடன் கூடிய எளிய இயல்புநடை
தூங்க வைத்தது : தூங்கவில்லை
ஏங்க வைத்தது : ஈழத்தமிழர் வாழ்வில் விடியல் பிறக்க

வலையத்தில் வாங்க..

குறிச்சொற்கள்: ,
November 18, 2008 - 12:18 AM சாரல்கள் (4)

தெலுங்குதேசத்துல தமிழ்த்தாலாட்டு

அண்மையில பிறந்தநாள் வந்துச்சு. ஆண்டுக்கு ஒருமுறை பிறந்தநாளுக்கு மட்டும் இறைவனை நினைத்துக் கோவிலுக்குச் செல்லும் நம்மத் தலைமுறையோட வழக்கமா, அலுவல்களுக்கு இடையில அடிச்சுப் புடிச்சுப் போறதுக்குள்ள, ‘சீதாராமாஞ்சனேயா தேவாலயத்’துல ராமரோடச் சுற்றுப்புறச் சகாக்கள்-லாம் கதவைச் சாத்திக்கிட்டுத் தூங்கப் போயிட்டாங்க, ராமரும் சீதையக் கூட்டிக்கிட்டுத் தூங்கப் போலாம்னு இருந்தாரு.

நாள்முழுக்கத் தனக்குப் புரியாத வடமொழியிலும் இன்னபிற மொழிகளிலும் இறைவனை ஓதி, தன் “கடன் பணிசெய்துக் கிடப்பதே” என்று வசூலில் இருந்த ஐயர், ராமரைத் தாலாட்டுப் பாடித்தான் தூங்கவைப்பேன்-னு அடம்பிடிச்சி அவரத் தூங்கவிடாம கடைசிநேர ஓதல்கள் சிலதைச் செஞ்சுட்டிருந்தாரு. வழக்கம்போல ஐயரைக்கண்டுக்காம ராமர்கிட்ட இந்தாண்டுக்கான order list-அ அடுக்கி வைச்சுக்கிட்டு இருந்தப்ப தான் ஐயரோட அந்தச் சொற்கள் லேசாக் காதுல விழுந்துச்சு..

“…..உனக்கு…… தாலேலோ,……..தாலேலோ..”

“என்னாது….?!?!”-ன்னு அப்படியே ராமர்கிட்ட இருந்து ஐயர்கிட்ட கவனம்போன நேரம் - வாத்தியார் வர்றச் சத்தம் கேட்டு படம்வரைஞ்சினு இருந்தப் பையன் பக்கம் திருப்பி எழுதப் போவது - போல சட்டுனு ஐயர் பாடலைத் திருப்பி வடமொழிக்குக் குதிச்சிருந்தாரு. தொடர்ந்துக் கேட்ட நம் விடாமுயற்சியப் பாராட்டி ஐயர் தாலேலோவையும் வடமொழியையும் ரிப்பீட்-டினாலும் (ராமர் ரொம்ப நல்லவரு - ரெண்டுமுறைத் தாலாட்டுக்கேத் தூங்கிடுவாருப் போல), முதலில் கேட்டத் தாலேலோ-க்குமேல ஒண்ணும் பெருசாக் கேக்கல. ஆனா “மலையாளக் கரையோரம் குருவி தமிழ் பாடுதோ” இல்லையோ, “தெலுங்குக் கரையோரம் ஐயர் தமிழ் பாடுறாரா”-னு கண்டுபிடிக்காமப் போக மனசும் கேக்கல.

அதுக்குள்ள ராமர்தான் தூங்கப் போயிட்டாரே-னு, மிச்சம் மீதியிருந்த ராமரோடப் பால், பழத்தையெல்லாம் ஐயர் லபக்கிக்கிட்டிருக்க, வெளியப் போகவும் விரும்பாம உள்ள நிக்கவும் முடியாம, கால் வட்டம் போடத் தொடங்கிடுச்சு. ஓரக்கண்ணால கவனிச்ச ஐயர் “ஒருவேளை இவன் பாம்ப் வைக்க வந்திருப்பானோ”-னு யோசிச்சு முறைச்சாரு. “கோவில்-ல குண்டு வைச்சுப் பயனில்ல - அதெல்லாம் கூட்டம் வர எடத்துல வைக்கணும்”-னு மனசுக்குள்ள சொல்லிக்கிட்டே பேச்சுக் குடுத்தேன்..

“ஸ்வாமி, அதி - First ஸ்லோகம் - language தமிழ் காதா?” (அந்தப் பாட்டு தமிழ் இல்ல?)

“ம்ம்ம்ம், தெல்லேதே, அதி ஏதோ ‘மாணிக்கம் கட்டி யாரம்’ ஒக்கட்டி உந்தி” (தெரியலையே, அது ஏதோ ‘…’னு ஒண்ணு இருக்கு)

இது போதுமே வலையத்துல வலைப்போட, ஐயருக்கு முதல்ல நன்றியப் போட்டுட்டு வந்தாச்சு. அப்புறமா நேரங்கெட்ட நேரத்துல வலையத்துல வெட்டியா இருந்தப்ப கூகிளித்ததுல ஐயர் தாலாட்டியது தமிழிலும் தான்கிறது உறுதியாச்சு. நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்துல பெரியாழ்வாரோட மூன்றாவது திருமொழியிலிருந்து அந்தப் பாட்டு:

மூன்றாம் திருமொழி - மாணிக்கம் கட்டி
(கண்ணனைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுதல்: தாலப்பருவம்)

கலித்தாழிசை

44:
மாணிக்கம்கட்டி வயிரம்இடைகட்டி
ஆணிப்பொன்னால்செய்த வண்ணச்சிறுத்தொட்டில்
பேணிஉனக்குப் பிரமன்விடுதந்தான்
மாணிக்குறளனே. தாலேலோ
வையமளந்தானே. தாலேலோ. (2) 1.

நன்றி - மதுரை தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம்

ஆகா, என்ன அருமையா எளியதமிழ்-ல இறைவனுக்கே தாலாட்டுப் பாடியிருக்கிறார் ஆழ்வார். பாவம் அந்த ஐயர் இதோடப் பொருள் தெரியாம - பொருள விடுங்க, இதோட மொழிக்கூடத் தெரியாம நாளும் பாடிக்கிட்டிருக்காரு! (ஒருவேளை மொழித் தெரிஞ்சிருந்தாப் பாடியிருக்க மாட்டாரோ..!) ஏதோ, தமிழ்நாட்டுல இருந்துக்கிட்டே சிலதுகள் செஞ்சுக்கிட்டிருக்கற வடமொழி வண்டவாளத்துக்கு இது தேவலாம் இல்ல..

குறிச்சொற்கள்: , , ,
November 10, 2008 - 8:16 PM சாரல்கள் (4)

செல் பே(சி)ச்சு

ம்ம்.. அது ஒரு காலம். மூணு வருஷம் ஆச்சு, நான் அவுருகூட வந்து. அப்பலாம் எங்குளுக்கு ரொம்ப புதுசு. அவ்ள பேரு எங்கள வச்சுக்க வசதி கெடயாது. எங்கூட இருந்தவளுங்கலாம் அசிங்கமா, குண்டா, பெருசு பெருசா இருந்தப்ப, நாமட்டும் ரொம்ப அழகா, ஒல்லியா, குட்டியா இருந்தேன். அதேன் அவுருக்கு புடிச்சிருந்துச்சு. வந்து பாத்தவரு வச்சகண் வாங்கல. ஒடனே கூட்டிக்கினு வந்துட்டாரு.

அவுருக்கு வேற எம்புகழ பாடறதுனா சொல்லவே வேணா; ஊருக்கே சொல்லுவாரு. நாந்தேன் மொதமொதல்ல அவ்ள சின்னதா அடக்கமா அழகா இருந்தேன். ஒத்த குரல்ல கத்திகினு இருந்தவளுக மத்தியில பலகுரல்ல பாடுவேன். அதேன் அவுருக்கு ரொம்ப புடிச்சிருந்துச்சு.

செல் பே(சி)ச்சு

அவுரு எதோ சாப்புட்டுவேரு கம்பெனியாமே, அதுல வேல செஞ்சாரு. நெரந்தர வருமானம் இல்லாம யாரும் எங்கள வச்சுக்க முடியாது. அப்போலாம் எங்களக் கூப்பிட்டா, கூப்புடறவங்க மட்டுன்ல்ல, எங்கள வச்சிருக்கறவங்ககூட பணம் குடுக்கணும். அதுவும் எங்க வேணாலாம் இருக்க மாட்டோம்; பெரியபெரிய ஊருங்கல்ல மட்டுந்தேன். அவுரு எக்கச்சக்கமா செலவு பண்ணித்தேன் என்ன கூட்டிக்கினு வந்தாரு. மாச சம்பளத்துல பெரும்பகுதி எனுக்கே செலவு பண்ணுவாரு.

எதோ சீனா தானா, காணாம் போனானு ஒரு பாட்டு, வீணை வாசிக்கறா மாதிரி வெள்ளக்காரிகூட ஆட்டம் போடுவாளே, அதக் கத்துக்கச் சொல்லி, யாரு கூப்புட்டாலும் பாடச் சொல்லுவாரு. அதுலயே நானும் அவுரும் செம பிரபலம் ஆயிட்டோம். எல்லாம் வந்து ‘எங்களுக்கும் இந்த பாட்டு வேணும், சொல்லித்தாங்க’னு கேப்பாங்க, ஆனா ஒத்தக்குரல்காரிங்கலாம் அவ்ளோ நல்லா கத்துக்கினு பாட முடியல, அதனால வுட்டுட்டாங்க.

நாளாக நாளாக நானும் நெறந்தேஞ்சு போயிட்டேன். அவுரும் அப்பப்ப புதுத்துணி வாங்கிப் போடுவாரு. அப்புடியே புதுசா பொறந்தவ மாதிரி நானும் துணி கிழியற வரைக்கும் சீவி சிங்காரிச்சிக்கினு திரியுவேன். நானும் அவுருக்குனு அயராம ஒழச்சேன்.

ம்ம்.. அது ஒரு காலம். என்ன பண்றது.. வயசாக ஆக நானும் பழசாயிட்டே போனேன். எப்படா நம்மள கழட்டிவுட்டுக்கினு வேற ஆள பாப்பாருனு பாத்துக்கினு இந்தப்பதேன் ஒருநா அவள கூட்டிக்கினு வந்தாரு; என்னயவிட இன்னும் அழகா, குட்டியா இருந்தா; எந்த பாட்டு சொன்னாலும் பாடுவாளாம், சினிமா பாட்டுகூட ஒண்ணு ரெண்டு பாடிக்காட்டுனா; நெறந்தேய மாட்டாளாம்; இன்னும் எதோ கண்டது போனத செய்வானு பேசிக்கினாங்க. அவுர பிரியப் போறோம்னு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு.

கடசியா அந்த நாளும் வந்துச்சு, அந்த புது சிறுக்கிய மட்டும் வச்சிக்கினு, என்ன ஊருல அவங்கண்ணன்கிட்ட அனுப்பிட்டாரு. இப்பதேன் எல்லாம் வச்சிக்கற அளவுக்கு மலிஞ்சு போயிட்டமே. எந்த ஊருல வேணா இருக்கறோம். புது ஊரு, புது எடம், எல்லாம் நல்லாதேன் இருந்துச்சு. அவுங்கண்ணன் என்ன அவுரளவுக்கு பயன்படுத்தலனாலும் கண்ணுங்கருத்துமாதேன் பாத்துக்கறாரு.

ம்ம்.. இது ஒரு காலம். இவுரு எதோ சின்ன வீடு, பெரிய வீடுனு குத்துப்பாட்டு ஒண்ணு, மேஸ்திரிங்க கட்டட வெல செஞ்சுக்கினு பாடுவாங்களே, அதக் கத்துக்கினு பாட சொல்றாரு. இந்த ஊருல இந்த பாட்டுக்குத்தேன் மவுசு. காலம் எவ்ளொ மாறிப்போச்சு. இப்போலாம் எங்கள கூப்பி்டறவங்க மட்டு்ம் பணம் குடுத்தாப்போதுமாம்.

இன்னும் எத்தன வருசமோ, மாசமோ? எப்ப இருப்பனோ, எங்க போவனோ? என்னக்கி இவுரு என்ன தூக்கிப்போட்டுட்டு வேற ஒருத்திய கூட்டிக்கினு வருவாரோ? அதுக்கப்புறம் என்னா ஆவனோ!

ம்ம்.. இது ஒரு காலம்!

குறிச்சொற்கள்: , ,
November 6, 2008 - 3:51 PM சாரல்கள் (7)

கள்ளிப்பால் காவியம்

சிதறிக் கொண்டிருந்தது செடியிலிருந்து பால்,
   அழத் தொடங்கினாள் குழந்தை பிறப்பில்..
கதறிக் கொண்டு அழுதாள் தன் தவிப்பால்,
   விழத் தொடங்கினாள் பாழுங்கிணற்றில்..

தன்னைப் படைத்தவனுக்காக அழுதாள்,
   அணைத்திருக்கும் தன் அன்னைக்காக..
தன்னைப் பெண்ணாக்கியவனுக்காக அழுதாள்,
   துணைப் போனத் தன் தந்தைக்காக..

பெண்ணின் போற்றாப் பெருமைக்காக அழுதாள்,
   ஆணைமட்டும் பிரித்துப் போற்றுவோருக்காக..
பெண்ணின் பெருமையறியா இவ்வுலகுக்காக அழுதாள்,
   ஆணாதிக்கம் அடையப் போகும் அழிவுக்காக..

தொட்டில் குழந்தைத் திட்டத்துக்காக அழுதாள்,
   அதில்கூட தன்னைப் போடவிழையா பெற்றோருக்காக..
கட்டிலில் கண்ணுறங்குபவளின் கையாலாகாமல் அழுதாள்,
   எதில் போட்டாலும் திருந்தா தன் உறவினருக்காக..

தன்னைக் கொள்ளப் போகும் கள்ளிக்காக அழுதாள்,
   கள்ளியிலிருந்து பால் கொண்டுவரும் கிழவிக்காக..
பெண்சிசுவைக் கொல்லா ஓர் உலகுக்காக அழுதாள்,
   தள்ளி வரப்போகும் அத்திருநாளுக்காக,

அழுதாள், அழுதாள்; வீறிட்டு அழுதாள்;
   அழுகை நின்றது.
இன்றைக்கு செத்தால், நாளைக்கு பாலோ?
   இன்றைக்கு பாலில் இன்றே செத்தாள்!

குறிச்சொற்கள்: ,
November 6, 2008 - 3:21 PM சாரல்கள் (2)